கதறிய குழந்தை! சாக்லேட் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்டு.. துடிதுடிக்க பலி! புதுச்சேரியில் பரிதாபம்
புதுச்சேரி: பெற்றோர்களின் அலட்சியத்தால் சமீபகாலமாக சிறு குழந்தைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது.
தாயார் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், முழுக்க முழுக்க உறவினர்களின் கவனக்குறைவால் தான் அந்தக் குழந்தை உயிரிழந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவனம் அவசியம்
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை பார்ப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. குழந்தையின் பசிக்கு பாலூட்டி, அதை தூங்க வைப்பதே தாய்மார்களின் வேலையாக இருக்கும். ஆனால், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் அவற்றை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் குழந்தைகள் நடை பயின்ற மகிழ்ச்சியில் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கைக்கு எட்டும் பொருட்களை எடுக்கவும் முயற்சிக்கும். அப்படி எடுக்கும் பொருட்களை சட்டென வாயில் போடும் பருவமும் இதுதான். இது பல நேரங்களில் உயிரிழப்பு வரை செல்லக்கூடும். அப்படியொரு பரிதாப சம்பவம்தான் புதுச்சேரியில் நடந்துள்ளது.

கணவர் இழந்த பெண்
புதுச்சேரியில் புதுசாரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின். இவருக்கு 3 வயதில் தியா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் இறந்துவிட்ட நிலையில், மேரி ரோஸ்லின் தான் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். வேலைக்கு சென்றால் குழந்தையை பார்ப்பதற்காக தனது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோரையும் தனது வீட்டில் வைத்துள்ளார் ரோஸ்லின்.

எமனாக மாறிய எலி பேஸ்ட்
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி காலை மேரி ரோஸ்லின் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது குழந்தை தியா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. ரோஸ்லினின் பெற்றோரும், சகோதரிகளும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது நீண்டநேரமாக குழந்தையின் சத்தம் வராததால் அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை தியா வாயில் நுரையுடன் கீழே மயங்கிக் கிடந்தது. மேலும், அதன் அருகே எலி பேஸ்ட்டும் இருந்துள்ளது.

பரிதாபம்..
எலி பேஸ்ட்டும் சாக்லேட் போன்ற கவரில் இருந்ததால், சாக்லேட் என நினைத்து குழந்தை தியா, எலி பேஸ்ட்டை சாப்பிட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் குழந்தை தியா நேற்று உயிரிழந்தது. இதுகுறித்து தன்வந்தரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications