பிரதமரின் ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தில் புதுச்சேரி.. கமிட்டிகள் அமைப்பு - கவர்னர் ஒப்புதல்!
புதுச்சேரி: பிரதமரின் கதி சக்தி யோஜனா என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் இணைந்துள்ளது.
புதுச்சேரிக்கான மாஸ்டர் பிளான் திட்டமிடலில் மாற்றங்களை அங்கீகரிப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கதி சக்தி யோஜனா திட்டம், நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்தப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
கதி சக்தி
பிரதமரின் கதி சக்தி யோஜனா என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். கதி சக்தி என்றால் அதிவிரைவு சக்தி என்று பொருள்.
கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். நாட்டின் பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடையும், வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
குறைந்த காலத்தில் வளர்ச்சி
கதி சக்தி திட்டத்தில், ரயில்வே, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் திட்டமிடப்படும் உள்கட்டமைப்பு முயற்சிகளை ஒன்றிணைக்க ஒரு டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் அமைக்கப்படுகிறது.
கதி சக்தி திட்டமானது, 2 லட்சம் கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளது.
புதுச்சேரி இணைகிறது
இதில் இணைய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது புதுச்சேரியும் இணைகிறது. இதற்காக புதுச்சேரி மாஸ்டர் பிளானில் மாற்றங்களை அங்கீகரிப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 8 துறைகளின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், தொழில் வணிகத் துறை செயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆளுநர் ஒப்புதல்
பிரதமரின் கதி சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு குழுக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்ள்ளார்.
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதி சக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் திட்டமிட்டு பணிகளைத் தொடங்க உள்ளது.