நமக்கு சரக்குதான் பிசினஸ்..நாமளும் கடையை தொறப்போம்..குடிமகன்களுக்கு புதுவை முதல்வரின் குட்நியூஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இல்லை என்று ஜிப்மர் மருத்துவமனை வீட்டுக்கு அனுப்பியது.
அவரது தாயார் ஜிப்மரில் பணிபுரிகிறார். பின்னர் அவர்கள் புதுச்சேரி அரசின் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நபர் எப்போது புதுச்சேரிக்கு வந்தார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை வருவாய்த்துறை, காவல்துறை பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியும், தமிழகமும் பின்னிப்பிணைந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டுமானால் இடையிடையே தமிழகம் வருகிறது. தமிழகத்தில் இருந்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இங்கு வருகின்றன. அதுபோல் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தமிழகத்துக்கு அனுப்புகிறோம். எனவே இரண்டு மாநில எல்லைகளின் அருகில் இருப்பவர்களை பரிசோதனை செய்து உள்ளே அனுப்பலாமே தவிர அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே காவல்துறை, மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துபேசி, உள்ளே அனுமதிக்க அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு சென்றால் அவர்கள் தடை செய்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இரு மாநிலத்துக்கும் சுமூக நிலை இருக்க வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை தொடங்கப்பட்டு விட்டது. ஜிப்மரிலும் வெளிப்புற சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று அதன் இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதிக்கு நான் சென்றேன். அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஒரு பகுதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதற்காக அந்த பகுதியில் உள்ள 5,000 நபர்களை தனிமைப்படுத்திவிட்டு, அவர்களுக்கு பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மாநில அரசுகளுக்கு நிலைமை தெரியும். மாநில அரசுகள் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். எந்த பகுதியில் குடியிருக்கின்றனரோ அந்த பகுதியை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும். 500 மீட்டர் இடைவெளி என்று சொல்லி மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியை பல இடங்களில் தனிமைப்படுத்தினால் மாநிலமே ஸ்தம்பித்துவிடும்.
இது சம்மந்தமாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதி, தனிமைப்படுத்தப்பகுதி என்பது மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டுமே தவிர மத்தியில் உள்ள அதிகாரிகள் நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலங்களை பொருத்தவரையில் அந்த மக்களின் வாழ்வாதார நிலை தெரியும். அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் தெரியும். ஆகவே அதன் அதிகாரத்தை விட்டுவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். வெகு விரைவில் அதற்கு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறினேன். புதுச்சேரியில் கொரோனாவை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நமக்கு இல்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
புதுச்சேரி மாநிலம் பாரம்பரியமாக மதுக்கடைகள் இருக்கும் மாநிலம். அண்டை மாநிலத்தின் முடிவை பொருத்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திருக்கலாம் என்று ஏற்கனவே எங்கள் அமைச்சரவையில் முடிவு எடுத்திருந்தோம். இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் எனும் நிலையில் மதுக்கடை உரிமையாளர்களை அழைத்து பேசி, புதுச்சேரியில் எப்போது மதுக்கடைகள் திறப்பது என்பது குறித்து வெகு விரைவில் முடிவு எடுப்போம். இதற்காக அமைச்சரவையில் கூடி முடிவை அறிவிப்போம் என்றார்.