தேவையில்லை ஹைட்ரோகார்பன்.. தமிழத்தை மிஞ்சிய புதுவை.. சட்டசபையில் அதிரடி தீர்மானம்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம். எங்களுக்கு அது தேவையில்லை என்ற தீர்மானத்தை புதுச்சேரி சட்டசபை இன்று ஒரு மனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழகத்தையே மிஞ்சி விட்டது, முந்தி விட்டது புதுச்சேரி அரசு. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. முதலாவதாக, இந்திய விஞ்ஞானிகள் ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய அளவில் சந்திராயன் 2 விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளார்கள். அதற்கு புதுவை சட்டசபை பாராட்டு தெரிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி பேசினார். இதனை தொடர்ந்து, சந்திராயன் - 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் பேசினர். மேலும் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமருக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் மற்றும் அதிகாரிகள் செயல்படவில்லை என்றால், ஏன் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களிடம் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. விதிமுறைகள் மீறி செயல்படும் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், ஆட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள் என்று எம்.என்.ஆர்.பாலன் ஆவேசத்துடன் பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டில்லிக்கும், புதுச்சேரிக்கும் வித்தியாசம் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சரவையின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் தான் ஆளுநர் உள்ளார் என்றும், அதிகாரிகள் விதிமுறை மற்றும் சட்டங்களை சரியாக படிப்பதில்லை.
இன்று மாலை தலைமை செயலரை அழைத்து அமைச்சரவை முடிவுகளை அரசாணையாக வெளியிட உத்தரவிடுவேன் என முதல்வர் நாராயணசாமி பதில் அளித்தார். முதலமைச்சரை தொடர்ந்து பேசிய சபாநாயகர் சிவகொழுந்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு எந்தவகையில் முடிவெடுத்தது. இதுகுறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா. காங்கிரஸ் அரசில் கூட்டணியில் இருக்கும் நாங்கள் இதை அனுமதித்ததாக ஆகிவிடும். ஆகவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக எம்.எல்.ஏ சாமிநாதன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதே எனக்கூற, காங்கிரஸ் கொள்கையை நம்பி திமுக இல்லை. திமுகவினருக்கு என தனிக்கொள்கையுண்டு என திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆவேசமாக பேசினார். இதற்கு குறுருக்கிட்ட அதிமுக உறுப்பினர் அன்பழகன், அப்போ கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டியது தானே என பேசினார். இதனால் சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து பேசி முடிவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications