விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது விவசாய சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10.15க்கு கூடியது. இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் நியமன எம்.எல்.ஏ. பாஜகவின் சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய சட்டசபை கூட்டத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டசபை தலைவர் அன்பழகன், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் மாநில அரசால் தீர்க்க வேண்டிய நிலையில் அதற்கெல்லாம் சட்டசபையை கூட்டவில்லை. தன்னுடைய அரசியல் விருப்பு, வெறுப்புக்காக சட்டசபையை முதல்வர் நாராயணசாமி தவறாக பயன்படுத்துகிறார். இன்றைய சட்டசபை தீர்மானங்கள் தேவையற்றது என அதிமுக கருதுகிறது. எனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் நாங்கள் நான்குபேரும் சட்டசபையை புறக்கணித்துள்ளோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களின் போது, விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தார் முதல்வர் நாராயணசாமி. ஏற்கனவே டெல்லி மாநில சட்டசபையில் முதல்வர் கெஜ்ரிவால் இதேபோல் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தார். டெல்லி, கேரளா சட்டசபைகளில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications