யூனிபார்ம் கிடையாதா? பள்ளி சீருடையில் சட்டசபைக்கு வந்த.. புதுச்சேரி திமுக எம்எல்ஏக்கள்.. பரபரப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் சீருடை அணிந்து சைக்கிளில் பேரணியாக சட்டசபைக்கு வந்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாம் கூட்டத் தொடரின் மூன்றாம் பகுதி கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கல்வியாண்டு முடியும் தருவாயில் கூட பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
புதுச்சேரி சட்டசபையானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியன்று சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதியன்று கூட்டத்தொடர் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று மீண்டும் சட்டசபை தொடங்கியது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் இது தொடர்பான கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மட்டுமல்லாது குடியரசு தின உரையில் ஆளுநரின் உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.748 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், லேப்டாப் வழங்கப்படவில்லை என்று திமுக குற்றம் சாட்டியிருந்தது.
இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகள் கூட்டணியாக பாஜக+என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. ஏனெனில் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலும், கல்வியாண்டு முடியும் நிலையிலும் இன்னும் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை. எனவே இந்த பிரச்னையை பெரியதாக எழுப்ப திமுக திட்டமிட்டு வந்தது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்ல்எல்ஏக்கள் பள்ளி சீருடையுடன் ஐடி கார்டு அணிந்து சைக்கிளில் வந்தனர்.
ஸ்டிரிக்ட்! சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம்ல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, நாகராஜன் மற்றும் சம்பத் ஆகியோர் சைக்கிளில் மிஷன் வீதியில் தொடங்கி ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை வழியாக புதுவை சட்டமன்றத்தை வந்தடைந்தனர். சட்டமன்றத்தில் கூட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது. கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமை அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தொடர் தொடங்கிய 24 நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இப்படி சலசலப்பு ஏற்பட்டுள்ளது.