’டோல்கேட்’ பயம்! போலீஸ் ஸ்டிக்கருடன் உலா வந்த பாஜகவினர்! பறந்த புகார்! விளாசியெடுக்கும் நெட்டிசன்கள்
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கேரளாவில் அமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பாரதிய ஜனதா கட்சியினர் டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் பாஜக கட்சி கொடி கட்டி இருந்த வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கருடன் பயணம் செய்து மோசடி செய்ததாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களை தவிர அந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் புதுச்சேரி கேரளா இடையே பயண வழியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

சுங்க கட்டணம்
சுங்க கட்டண உயர்வுக்கு இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளும் கட்சியான பாஜக அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சுங்க கட்டணத்தை தவிர்ப்பதற்காக பாஜகவினர் காவல்துறை ஸ்டிக்கரில் உலா வந்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள மாஹே யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

பாஜகவினர் ஏமாற்றம்
இந்நிலையில் நேற்று அங்கு புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் புதுச்சேரியில் இருந்து மாஹே புறப்பட்டுச் சென்றார். அமைச்சரோடு பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜக கொடி கட்டிய காரில் அவருடன் ஊர்வலமாக சென்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் சென்ற நிலையில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

போலீஸ் ஸ்டிக்கர்
அதாவது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் இருக்க பாஜகவினர் பாஜக கொடி கட்டிய தங்களது தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களில் காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி பயணித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் 700 கிலோமீட்டர் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஜகவினர் கட்டணம் செலுத்தாமலேயே சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. அமைச்சர் மற்றும் அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்து பாஜகவினர் சுமார் 5 வாகனங்களை இது போன்ற மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பறந்த புகார்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு புகார் கொடுத்து இருக்கின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்கள் என்றால் கட்டணம் செலுத்த தேவையில்லையா? அல்லது காவல்துறை அல்லாதவர்கள்பாஜ கட்சியாக இருந்தால் போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்திக் கொள்ளலாமா? இதுபோன்ற நடவடிக்கைகளை பாஜக தலைவர் ஊக்குவிக்கிறாரா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications