பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவி தொகை.. முதல்வர் சொன்ன சூப்பர் தகவல்! மகிழ்ச்சியில் பெண்கள்
புதுச்சேரி: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாகப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது.
இருந்த போதிலும் ஓராண்டு ஆகிய பின்னரும் இன்னும் இந்த வாக்குறுதி இன்னும் கூட நிறைவேற்றப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகளும் கூட விமர்சித்து வருகின்றனர்.

புதுச்சேரி
இதற்கிடையே தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டமும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதுவை முதல்வர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

முதல்வர் ரங்கசாமி
இது தொடர்பாக அவர் கூறுகையில், "புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனப் பிரதமர், உள் துறை அமைச்சர், நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருந்தேன். மத்திய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. இதற்காகப் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். கடந்த ஆட்சியில் மிக மோசமான நிர்வாக சீர்கேடுகள் நடந்துள்ளன.

வளர்ச்சி நடவடிக்கை
அதை இப்போது தான் மெல்லச் சரி செய்து வருகிறோம். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் தமிழக அரசிடமும் நிலம் கேட்டுள்ளோம். இதுவரை தமிழக அரசு நிலம் ஒதுக்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் வரும். இதற்கான நடவடிக்கையைத் தீவிரமாக எடுத்து வருகிறோம். இதற்காகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்த உள்ளோம்.

தொழிற்பூங்கா
சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி இருந்த நிலையில், அதில் 100 ஏக்கரில் மருத்துவ பூங்காவை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளோம். மற்ற இடங்களில் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மிக விரைவில் அனுமதி வழங்க உள்ளோம். இதன் மூலம் புதுச்சேரி வளர்ச்சி வேகமெடுக்கும்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ 1000
குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்து இருந்தோம். அதேபோல 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவை இரண்டும் மிக விரைவில் வழங்கப்படும். அதன் பின்னர் விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் கூட உதவித் தொகை வழங்குவோம்.புதுச்சேரியில் இப்போது 10 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்படும். மற்ற இடங்களும் படிப்படியாக நிரப்பப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications