புதுவை சிறுமி வழக்கில் அலட்சியம்? முத்தியால்பேட்டை போலீஸார் கூண்டோடு மாற்றம்
புதுவை: புதுவையில் சிறுமி வழக்கில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகார தொடர்ந்து புதுவை முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.

சிறுமியை காணவில்லை: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
சிசிடிவி காட்சி: இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்று முன் தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
கால்வாயில் கொடூரம்: இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சிறுமியின் உள்ளுறுப்புகளில் காயங்களும் தையலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 7 பேரின் ரத்த மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி: ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மறியல் செய்திருந்தனர். இதையடுத்து அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் ரங்கசாமி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ரூ 20 லட்சம் நிவாரணம்: மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடு் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்ததன் பேரில் சிறுமியின் உடலை வாங்கிக் கொள்ள பெற்றோர் முன் வந்தனர். மேலும் நேற்றைய தினமே குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுவை சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு இடமாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications