முதல்வரை தள்ளிவிட்ட அமைச்சரின் பாதுகாவலர்? வீடியோவில் பதிவான காட்சிகள்.. புதுவையில் பரபர சம்பவம்!
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலர் தள்ளிவிட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றத்தில் இருந்தே அவர்தான் அங்கு அதிகாரம் செலுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. புதுவையில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு சில கூடுதல் பவர் இருந்தாலும்.. முதல்வர் ரங்கசாமி ஓரம்கட்டப்படுவதாக அவ்வப்போது புகார்கள் என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் முதல்வரை பாதுகாவலர் ஒருவர் தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு வந்தார்.

உள்துறை அமைச்சர்
அவரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமைச்சர், சபாநாயகர் செல்வம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வரும் பொழுது துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வந்தார். அப்பொழுது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வந்தார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

பின்னோக்கி சென்றார்
இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதலமைச்சர் ரங்கசாமி சுதாரித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரியும் ராஜசேகர் கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாதுகாவலராக பணிபுரிந்து உள்ளார்.

ஆய்வாளர்
திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும்படி மத்திய பாஜக முதலமைச்சர் ரங்கசாமிக்கு லேசாக நெருக்கடி கொடுத்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications