தமிழகம், ஆந்திரத்தில் இருந்து புதுவை செல்லும் குடிமகன்களின் "வயிற்றில் அடித்த" புதுவை அரசு!
Recommended Video
புதுவை: புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பீர் 10 ரூபாய் வரையும், மற்ற மதுவகைகள் குறைந்த பட்சம் ரூபாய் 7 முதல் 30 ரூபாய் வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் மதுபானங்கள் விற்பனை வரி மூலம் வரும் வருமானத்தில்தான் மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட நிதியை புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. மேலும் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மது வகைகளும் கிடைக்கின்றன. புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதாலும், பல்வேறு வகையான மதுபானங்களை ருசித்து பார்ப்பதற்காகவும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்த ஆயிரகணக்கானோர் நாள்தோறும் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மத்திய அரசும் புதுச்சேரிக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசின் வருமானத்தை பெருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கலால் வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை உயர்வின்படி, பீர் வகைகள் ரூபாய் 10 வரையும், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம், ஒயின் உள்ளிட்ப மதுவகைகள் குறைந்தபட்சம் ரூபாய் 7 முதல் 15 ரூபாய் வரையிலும், அதிகபட்சமாக ரூபாய் 15 முதல் ரூபாய் 30 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வினால் புதுச்சேரியில் உள்ள குடிமகன்களும், மதுவை நாடி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கலக்கமடைந்துள்ளனர்.















Click it and Unblock the Notifications