நீங்க வந்தா மட்டும் போதும்.. அதுக்கான செலவை நாங்க பாத்துக்குறோம்.. நாராயணசாமி
புதுச்சேரி: புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சேரி வருவதற்கான பயணக்கட்டணத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் மாஹே பகுதியில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓரிரு தினங்களில் மீண்டும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்யப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான முத்தியால்பேட்டை, திருக்கனூர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த நிலையில் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
கொத்தா தாக்கும் கொரோனா.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. 2 நாட்களில் 25% தொற்று!
கோயம்பேட்டிலிருந்து வந்த வைரஸ்
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பரவிய கொரோனா தொற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. விழுப்புரம், கடலூர் பகுதிகளிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சூநிலையில் கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்த 160 பேரின் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து 43 பேருக்கு பரிசோதனை செய்ததிலும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
கொரோனா தொற்றை தடுக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்து புதுச்சேரியினுள் வருவோரை தடுத்து நிறுத்தவும், புதுச்சேரியில் கொரோனா தொற்று பராவமால் தடுக்க காவல்துறையினர் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஒத்துழைப்பு தேவை
கொரோனா தொற்றை வெகுவாக குறைத்த பிறகு கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. ஆனால் வெளியே கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. ஆகவே கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். எனவே ஓரிரு நாட்கள் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளுக்கு என்னென்ன நேரம் கொடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்து அறிவிப்போம்.
புலம் பெயர்ந்த மக்கள்
மீறி வெளியே அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருந்தால் கடைகள் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் திரும்பி வர முடியவில்லை. ஆகவே அதிகப்படியான ரயில்களை இயக்கி அவர்களை சொந்த ஊர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசு உதவவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் நிதியுதவி அளிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசுக்கு நன்றி
தற்போது மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலா பயணிகள் ரயில் பயணம் செய்தால் 85 சதவீத பணத்தை மத்திய அரசும் கொடுப்பதாகவும், 15 சதவீத பணத்தை மாநில அரசு வழங்குவதாகவும் கூறியுள்ளது. அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் வாகனங்களில் வருபவர்களுக்கு எந்தவித உதவியையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் புதுச்சேரிக்கு வர விரும்பினால் அவர்களின் கோரிக்கையை பதிவு செய்ய இணையதளம் தொடங்கியுள்ளோம்.
செலவு எங்களோடது
அதற்கான செலவுகளை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அது சம்மந்தமான நிதி பற்றி எந்தவித கவலையும் இல்லை. எனவே புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சேரி வருவதற்கான பயணக்கட்டணத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க தயாராக இருக்கிறோம். கொரோனா தொற்றில் நாம் மூன்றாம் கட்டத்தை நெருங்கிவிடுவோமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆகவே அதனை தடுத்து நிறுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாராயணசாமி தெரிவித்தார்.