"பாஜகவில் மகளிருக்கு பாதுகாப்பில்லை" காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு.. தமிழிசை என்ன சொன்னார் தெரியுமா?
புதுச்சேரி: பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆளுநராக இருப்பதால் பதில் அளிக்க முடியாது என்று பதிலளிக்க மறுத்து வெளியேறியுள்ளார்.
புதுச்சேரி அரசு, செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் ஜி20 மாநாட்டுக்கான சின்னம் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி கடற்கரைச் சாலை, காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு ஜி20 சின்னம் சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர் ஆகியவற்றை வெளியிட்டார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ஜி20 எல்.இ.டி. சின்னம் மற்றும் செல்ஃபி ஸ்டாண்ட் ஆகியவற்றை ஒளிரவைத்தார்.
பாட்ஷா பாரு, பாட்ஷா பாருனு போஸ்டர் அடிக்கிறாங்க.. பாஜக அண்ணாமலையால வளரவில்லை.. காயத்ரி ரகுராம்
ஜி20 சின்னம் வெளியீடு
இந்நிகழ்ச்சியின் போது, ஜி20 சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஜி20 சின்னம் சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர் போன்ற விளம்பரப் பொருட்கள் கல்வித் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜி20 சின்னம் காணொளியில் திரையிடப்பட்டது.
ஜி20 மாநாடு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடப்பது நாட்டுக்கே பெருமை. இதில் புதுச்சேரிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது நமக்கு பெருமை. அதற்கு புதுச்சேரியும் தயாராக இருக்கிறது. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசும் தீவிரமாக இருக்கிறது. நமது கலாச்சாரம், உணவு அனைத்தையும் ஏராளமான நாடுகளில் இருந்து வருபவர்கள் பார்க்க போகிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி
தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, நான் ஆளுநராக இருக்கிறேன். அதனால் காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது. கட்சித் தலைவராக இருந்திருந்தால், நிச்சயம் கருத்து கூறி இருப்பேன் என்று தெரிவித்தார்.
பதிலளிக்க மறுப்பு
தொடர்ந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பாஜகவின் கருத்தாக என்னால் சொல்ல முடியாது என்று பதிலளிக்க மறுத்து வேகமாக சென்றார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காயத்ரி ரகுராமிற்கு வாழ்த்து கூறிவிட்டு, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மறுத்து செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.