அப்போ கிரண் பேடி.. இப்போ தமிழிசை.. புதுச்சேரி மக்களிடம் குறைகளை கேட்கும் துணைநிலை ஆளுநர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கிரண் பேடி பாணியில், துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் புதுச்சேரியின் முதலமைச்சராக தமிழிசை செளந்தரராஜன் செயல்படுவதாகவும், நாராயணசாமி டம்மி முதல்வராக செயல்படுவதாகவும் நாராயணசாமி விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்வை இன்று தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும், இரண்டு முறை பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க தமிழிசை செளந்தரராஜன் முடிவு செய்துள்ளார்.

மக்களை சந்திக்கும் தமிழிசை
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்திக்க விரும்பும் பலர், தற்போது முன்பதிவு செய்து சந்தித்து வருகிறார்கள். ஆனால் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் ஆளுநரைச் சந்திக்க விரும்புவதால் இன்று முதல் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் "மக்கள் சந்திப்பு" நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் சந்திப்பு தொடக்கம்
அதன்படி பொதுமக்கள் ஆளுநரை சந்தித்து குறைகளை தெரிவிக்கும் நிகழ்வு இன்று ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழிசையை பார்க்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அவருடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

முன்பதிவு அவசியம்
மேலும் ஆளுநரைச் சந்திக்க விரும்புபவர்கள் 0413-2334050, 2334051 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், முன்பதிவு செய்யப்படும் முன்னுரிமை அடிப்படையில் ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் [email protected] என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரண் பேடி பாணி
பொதுமக்களின் குறைகளை கேட்கும் துணைநிலை ஆளுநர் பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி இதேபோல் குறைகள் கேட்டறிந்தார். தற்போது அதே பாணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications