புதுச்சேரியில் தொடரும் இழுபறி- சபாநாயகர் பதவி கேட்டு பாஜக அடம்- என்.ஆர். காங். திட்டவட்டமாக மறுப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை சபாநாயகர் பதவியை கேட்டு பாரதிய ஜனதா கட்சி அடம்பிடித்து வருகிறது. ஆனால் என்.ஆர். காங்கிரஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் தொடருகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 28 நாட்களாகிவிட்டன. முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுள்ளார். மேலும் எம்.எல்.ஏக்கள், சட்டசபையில் பதவி பிரமாணம் செய்துள்ளனர்.
தள்ளாடும் புதுச்சேரி.. 21 நாட்களாச்சு சட்டசபை கூடலை... எம்.எல்.ஏக்கள் பதவியேற்கலை-என்னதான் நடக்குமோ?
பாஜக தடாலடி
என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை இன்னமும் பதவி ஏற்கவில்லை. புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்றது. மேலும் நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த பேரும் பாஜகவினர். அத்துடன் 6 சுயேட்சைகளில் 3 பேரையும் பாஜக தம் வசப்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் பதவி
இதனால் புதுச்சேரி சட்டசபையில் பாஜகவுக்கு மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவின் இந்த தடாலடி நடவடிக்கையை என்.ஆர். காங்கிரஸ் விரும்பவில்லை. மேலும் தங்களுக்கு துணை முதல்வர் பதவி, 3 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் என்.ஆர். காங்கிரஸுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது.
சபாநாயகர் பதவி- பாஜக பிடிவாதம்
இதையடுத்து தங்களுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தே தீர வேண்டும் என அடம்பிடிக்கிறது பாஜக. இதனையும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. புதுவை சட்டசபையில் பாஜகவின் பிடிமானம் வலுவாக இல்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறது என்.ஆர். காங்கிரஸ்.
நீடிக்கும் குழப்பம்
ஆனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு முடிந்த அளவு நெருக்கடி தந்து பார்ப்பது; அப்படியும் அந்த கட்சி வழிக்கு வராவிட்டால் என்.ஆர். காங்கிரஸையும் உடைத்து தனித்தே ஆட்சி அமைக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 28 நாட்களுக்குப் பின்னரும் புதுச்சேரியில் அரசியல் குழப்பம் தொடருகிறது.