கஜானா காலி! பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல்! டெல்லியிடம் உதவி கேட்கும் புதுவை முதல்வர்
புதுவை: புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ 4000 வழங்க முதல்வர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித் துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அந்த பணத்தை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தை போல் புதுவையிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான கூடுதல் நிதியைப் பெற மத்திய அரசிடம் புதுவை அரசு உதவி கேட்டது. அதாவது புதுவையில் உள்ள 3.47 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ 4000 பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ 140 கோடி நிதி தேவைப்படுகிறது. புதுவை அரசின் ரூ 14,100 கோடிக்கான திருத்திய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் நீடித்துள்ளது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரங்கசாமி, கூடுதல் நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.
புதுச்சேரிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான விரிவான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அரசுத் துறைகள் நேற்றிரவே தேவையான புள்ளிவிவரங்களைத் திரட்டின. இந்த முக்கிய ஆவணங்களுடன், அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று (ஜனவரி 10) டெல்லி செல்கிறார்.
முன்னதாக, நிதி நெருக்கடியால், முதல்வர் திட்டமிட்ட ரூ. 5,000 பொங்கல் பரிசு ரூ.4,000 ஆகக் குறைக்கப்பட்டு, அதை வங்கி கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டது. 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹140 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அனுப்பப்பட்ட கோப்புகளை, போதிய நிதி இல்லை எனக் கூறி, நிதித்துறை அதனைத் திருப்பி அனுப்பியது. இதனால், பொங்கல் பரிசு வழங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications