தோண்டு பள்ளத்தை.. யாரும் உள்ளே வரப்படாது.. புதுச்சேரி போலீஸாரின் திடீர் அதிரடி!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க பள்ளம் தோண்டி பாதையை துண்டிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
மீதமுள்ள 6 பேரில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
40 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய புதுச்சேரி.. கடைகள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன!
மூடப்பட்ட எல்லைகள்
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் புதுச்சேரி எல்லைப் பகுதிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப்பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.
வழிகளை மறிக்கும் போலீஸ்
இதனால் அங்குள்ளவர்கள் புதுச்சேரி எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சிறு சிறு வழிகளையும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் தடுப்புகள்
அதுபோல் கடலூரைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியை அடுத்த பாகூர் பகுதியில் நுழையாமல் தடுக்க சோரியாங்குப்பம், குருவிநத்தம், கொமந்தான்மேடு போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து உள்ளனர். ஆனாலும் கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றங்கரையையொட்டிய நிலத்தின் வழியாக புதிய பாதையை ஏற்படுத்தி பாகூர் பகுதிக்குள் வருகின்றனர்.
பள்ளம் தோண்டி தடுப்பு
இதனை முற்றிலும் தடுத்திடும் வகையில் சோரியாங்குப்பம் மற்றும் நத்தப்பட்டு ஆற்றங்கரையோர பகுதியில் பாகூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையில் பள்ளம் தோண்டி கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையாத படி துண்டித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.