அடடா.. நாராயணசாமி போனதும் பழுதான கிருமிநாசினி தெளிப்பு பாதை.. மக்கள் ஏமாற்றம்!!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில், செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையில், முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்த கிருமி நாசினி தெளிப்பு பாதை, அரை மணி நேரத்திலேயே பழுதானதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலத்திலும் அமலில் உள்ளது. இதனால் புதுச்சேரியில் மருந்துக் கடைகளைத் தவிர, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் அனைத்தையும் பிற்பகல் 1 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே பெரிய மாா்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்ததால், அங்கிருந்த காய்கறிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, புதிய பேருந்து நிலையம் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது. இங்கு சமூக இடைவெளியுடன் மக்கள் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில் பேருந்து நிலைய நுழைவாயிலில் புதுச்சேரி நகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் கிருநாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்து, அதில் நடந்து வந்தார். அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி உள்ளிட்டோரும் நடந்து வந்தனர்.
முதலமைச்சரை தொடர்ந்து, பொதுமக்களும் கிருமிநாசினி பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதைனையடுத்து மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகளைக் கேட்டறிந்த நாராயணசாமி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறிகளை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திவிட்டு, புறப்பட்டு சென்றார். ஆனால், முதலமைச்சர் திறந்து வைத்த கிருமி நாசினி பாதை அரை மணிநேரத்திலேயே பழுதானது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரி மாநிலத்தில் 5 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் முத்தியால்பேட்டை மற்றும் அரியாங்குப்பம், திருபுவனை பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தயவு செய்து வெளியே வரவேண்டாம். இன்னும் 5 நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கடந்ந 15 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 1,523 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 9,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications