இங்க ஏன் உட்காந்திருக்கிங்க.. ஏரியாவுக்கு போலாம் வாங்க.. கும்பிட்டு அழைத்து சென்ற நாராயணசாமி!
புதுச்சேரி: ஊரடங்கு நேரத்தில் போராட்டம் வேண்டாம் எனக்கூறி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கையெடுத்து கும்பிட்டு அழைத்து வந்தார் முதல்வர் நாராயணசாமி.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 9,425 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 7,380 மெட்ரிக் டன், காரைக்காலுக்கு 1,476 மெட்ரிக் டன், ஏனாமுக்கு 584 டன் அரிசி விநியோகிக்கும் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதில் மாகே பகுதியில் அரிசி விநியோகம் முடிந்துவிட்டது.

அடுத்தடுத்து போராட்டம்
மற்ற பகுதிகளில் சில காரணங்களால் கடந்த சில நாட்களாக பயனாளிகளுக்கு அரிசி விநியோகிப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க வலியுறுத்தி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற வாயில் கதவுகளை இழுத்து மூடி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாராயணசாமியுடன் பேச்சு
இதனை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்களிடம், முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவில் அரிசி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். மேலும் முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்தபடி, இலவச அரிசியை ஓரிரு நாட்களில் வழங்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கேட்டை இழுத்து மூடினர்
இதனிடையே எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை இழுத்து பூட்டி தர்ணாவில் ஈடுபட்ட அதே வேளையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்குவதற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை என கூறி, துணைநிலை ஆளுநர் மாளிகை வாயிலில் அமர்ந்து அமைச்சர் கந்தசாமி தலைமையில், ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்ளிட்டோர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

காங். எம்எல்ஏக்கள்
இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைப்பெற்ற பகுதிக்கு நேரில் வந்த முதல்வர் நாராயணசாமி, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்குவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கையெடுத்து கும்பிட்டு அழைத்து சென்றார்.

செயல்பட விடாமல் முடக்குகிறார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பேரிடர் காலத்திலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசுடன் இணக்கமாக செயல்படாமல், இடையூறு செய்வதாகவும், வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு பிரதமர் கூறியும்கூட இலவச அரிசி வழங்க ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகமும், ஆளுநர் மாளிகை வளாகமும் பரபரப்புடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications