மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை.. நாராயணசாமி வரவேற்பு..!
புதுச்சேரி: மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இச்சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
சட்டப்பேரவையில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முறையாக மருத்துவம் செய்யப்படுகிறது. வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,150 ல் இருந்து 2,800 ஆக குறைந்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக கொரோனா தொற்றின் அறிகுறி இல்லாத அளவில் அனைத்துத் துறையினரும் அவர்களுடைய பணியை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகளைத் திறக்க இதுவரை 250 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 150 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்படுகிறது. அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் தொழிற்சாலைகள் கடைபிடித்தால் மட்டுமே திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை தாக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தியாவில் பல பகுதிகளிலும் இது நடந்துகொண்டிருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இச்சம்பவம் மருத்துவ சமூதாயத்துக்கு மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காக, கொரோனா தொற்றை ஒழிக்க தங்களின் உயிரை பணையம் வைத்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர் இறந்துவிட்டால் அவரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் பலர் எதிர்ப்பின் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. இது வருந்தத்தக்கது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமைபொறுப்பு அரசுகளுக்கு உண்டு. ஆகவேதான் மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் தாக்கப்பட்டாலோ அல்லது மருத்துவர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தினாலோ 7 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். மருத்துவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும். தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசத்தில் மருத்துவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஆகவே இந்த கடுமையான சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் நிலையை நாம் உருவாக்க முடியும். அதற்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு. புதுச்சேரி மாநிலத்திலும் இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

புதுச்சேரியில் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். பலரும் நிதி மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியில் திரைப்படம் எடுக்க ஏதுவான சூழல் இருப்பதால் நிறைய நடிகர்கள், இயக்குநர்கள் இங்கு வந்து பல படங்களின் காட்சிகளை எடுக்கின்றனர். அரசும் அவர்களுக்கு உதவி புரிகின்றது.
அதனை உணர்ந்து நடிகர் விஜய் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் மற்ற நடிகர்களும் புதுச்சேரி மாநிலத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications