இனி அமைச்சரவை பரிந்துரைகளை கிரண்பேடி நிராகரிக்க முடியாது.. நாராயணசாமி
புதுச்சேரி: அமைச்சரவை முடிவுகளை கிரண்பேடி இனி நிராகரிக்க முடியாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தீர்ப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான் என்றும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கவோ, குறைக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுகின்ற அனைத்து அதிகாரங்களுக்கும், அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்று நடக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் அமைச்சரவை அனுப்பும் கோப்பில் துணைநிலை ஆளுநருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட செயலர் மூலம் முதலமைச்சரின் கருத்தை கேட்டுத்தான் செயல்படுத்த வேண்டும். அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நிராகரிக்க அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சரவை பரிந்துரைத்த முடிவை மறுத்து ஆளுநர் அதிகாரிகளுக்கு எந்தவித மாற்று உத்தரவையும் இட முடியாது. இதன்மூலம் துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு எந்தவித உத்தரவிடவும் அதிகாரம் இல்லை என்பதை உயர் நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படிதான் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதையும், மாநில அரசு இயற்றும் சட்டம் எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டது என்பதை மத்திய அரசு பார்க்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை நேற்று வெளியான தீர்ப்பு உறுதிசெய்துள்ளது. ஆகவே தீர்ப்பை மதித்து ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு, ரஜினிகாந்த் முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து. இதில் தான் கருத்து சொல்ல விரும்பவில்லை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications