புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு டயாலிசிஸ் நோயாளி உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 92 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரும்பார்த்தபுரத்தை தற்காலிக முகவரியாக தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி திலாஸ்பேட்டை பீமன் நகரை சேர்ந்த நபர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரி திலாசுப்பேட்டை பீமன் நகரைச் சேர்ந்த 56 வயது நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஜிப்மர் சென்றார். அங்கு அவருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் புதுச்சேரி வீமன்நகர், சின்ன கொசபாளையம், கோரிமேடு, கிருமாம்பாக்கம் மற்றும் மாகே பகுதியை சேர்ந்த 17 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications