புதுச்சேரியில் ஒரே நாளில்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்.. அஞ்சாதீர்கள்.. விஜயபாஸ்கர் சூளுரை
இந்நிலையில் தற்போது புதிதாக காரைக்காலைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உள்பட 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், கர்ப்பிணி சென்னை சென்று திரும்பியவர் ஆவார்.
இதனிடையே 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறினார்.
இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கப்படாததால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க சட்டப்பேரவையில் பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸார் மற்றும் சட்டப்பேரவைக் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடை மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவைப் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.