ஜார்கண்ட் வெற்றி.. சபாநாயகர் சிவக்கொழுந்து கொண்டாட்டம்.. புதுவையில் சலசலப்பு!
புதுச்சேரி: ஜார்கண்ட் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதையொட்டி, புதுச்சேரி மாநில சபாநாயகர் சிவகொழுந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக ரகுபர்தாஸ் இருந்து வருகிறார். மொத்தம் 81 இடங்களை கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 40 க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஆளும் பாரதீய ஜனதா கட்சி 25 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்க 42 இடங்களே தேவையான நிலையில், காங்கிரஸ் கூட்டணி 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கொண்டாட்டத்தில் சபாநாயகர் சிவகொழுந்தும் பங்கேற்றார். அப்போது முதலமைச்சர் நாராயணசாமியும், சபாநாயகர் சிவகொழுந்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பறிமாரிக்கொண்டனர்.
ஒரு மாநிலத்தின் சபாநாயகராக இருப்பவர் கட்சி பாகுபாடின்றி நடுநிலையாக செயல்பட வேண்டுமென விதி உள்ளது. மேலும் அவர் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலோ, எந்தவித கட்சி பணிகளையும் மேற்கொள்ளாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி மாநில சபாநாயகர் சிவகொழுந்து ஜார்கண்ட் மாநில தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் சிவகொழுந்து சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து தொடர்ந்து பங்கேற்றதால், அவர் சட்டசபையை நடுநிலையாக நடத்தமாட்டார் எனக்கூறி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சபாநாயகர் சிவகொழுந்து மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.