வீட்டிலிருந்தபடியே "தீம் தரிகிட தித்தித்தோம்.. தரிகிட தரிகிட".. புதுவை கல்வித்துறை செம பிளான்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு பரதநாட்டியம், வயலின், ஓவியம், வாய்ப்பாட்டு, மிருந்தங்கம், மேற்கத்திய இசை உள்ளிட்ட கலை மற்றும் கைவினை பயிற்சிக்கு புதுச்சேரி அரசு கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை. இதற்கிடையில் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில்தான் பள்ளிகள் திறக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால் ஒருசில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்களை தற்போதே நடத்த தொடங்கிவிட்டன.
இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்களுக்கு கலை மற்றும் கைவினைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, இந்த கொரோனா விடுமுறை நாட்களில், மாணவர்கள் கலை மற்றும் கைவினை வகுப்புகளில் சேர்ந்து பயனடையும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்த ''கலைப் பயணம்'' என்ற இலவச தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் தனியார் தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட உள்ள இந்த இந்த நிகழ்ச்சியில் வயலின், ஓவியம், பரநாட்டியம், வாய்ப்பாட்டு, மிருந்தங்கம், மேற்கத்திய இசை, கைவினை மற்றும் வீணை ஆகிய துறைகளில் வல்லுநவர்களாக விளங்கும் ஜவஹர் பால்பவனைச் சேர்ந்த கலை மற்றும் கைவினை ஆசிரியர்கள், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு தங்கள் கலையைக் கற்பித்து, அவர்களது சந்தேகங்களுக்கு நேரலையில் விளக்கங்களும் அளிப்பார்கள்.
தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, 2 மணி நேரம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு முதல் 1 மணி நேரம்(மாலை 5 மணி முதல் 6 மணி வரை) ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளும், 2 வது 1 மணி நேரம் (மாலை 6 மணி முதல் 7 மணி வரை) மாணவர்கள் தொலைபேசி வாயிலாக கேட்கும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விடையளிக்கும் நேரலை நிகழ்வும் இடம் பெறும்.
ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கிடைத்துள்ள வரவேற்பையொட்டி, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.