வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலாலும், மெத்தனப் போக்காலும் சேமிப்பு பணத்தை எடுப்பதற்குள் மூதாட்டி ஒருவர் படாதபாடு பட்டுள்ளார்.
மூதாட்டி சேமிப்பு பணத்தை எடுக்கச் செல்லும் போதெல்லாம் வங்கியில் பணம் இல்லை, நாளைக்கு வா, இரண்டு நாள் கழித்து வா எனக் கூறி ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவச் செலவுக்கு பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் வங்கியில் அந்த மூதாட்டி கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள பொறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கிருஷ்ணவேணி என்ற 90 வயது மூதாட்டி சேமிப்புக் கணக்கில் ரூ.10,500 வைத்துள்ளார். அதனை அவரது மருத்துவச் செலவுக்காக எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற போது, இதயத்தில் ஈரமில்லாத அந்த வங்கி ஊழியர்கள் வங்கியில் பணமில்லை இன்று போய் நாளை வா என்கிற வகையில் தொடர்ந்து அலைக்கழித்துள்ளனர்.

கண்ணீர் விட்டு கதறி
இதையடுத்து மூதாட்டி கிருஷ்ணவேனி தனது பேரனை அழைத்துக்கொண்டு அந்த வங்கிக்கு சென்ற போதும் வங்கியில் இருந்து அதே பதில் தான் கிடைத்துள்ளது. ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பத்தாயிரம் ரூபாய் சேமிப்பு பணத்தை திருப்பிக் கொடுக்கக்கூட முடியாத இந்த நிலை புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கி ஊழியர்கள் பணம் வரவில்லை பாட்டி வந்தபின்பு கூறுகிறோம் எனச் சொல்லியதால் மனமுடைந்த கிருஷ்ணவேனி வங்கியிலேயே கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

ஆறுதல்
இதையடுத்து பாட்டி கிருஷ்ணவேணியை ஆறுதல் படுத்தி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பேரன். வங்கியின் இந்த நடவடிக்கையால் அதில் கணக்கு வைத்துள்ள 600-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு அவசரத்திற்கு உதவும் என்பதற்காக தான் வங்கியில் பொதுமக்கள் சேமிப்பு நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆனால் அவசரத்திற்கே உதவவில்லை என்றால் வங்கியும் தேவையில்லை, வங்கிக்கணக்கும் தேவையில்லை என்ற மன நிலைக்கு தான் மக்கள் தள்ளப்படுவார்கள்.

தீர்வு எப்போது
புதுச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என்றில்லாமல் தமிழகத்தின் பல வங்கிகளிலும் நிதிச்சிக்கல் நிலவி வருவதை அறிய முடிகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளும், அரசும் கவனத்தில் கொண்டு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications