திருமணத்துக்குப் பிறகும் காதலனுடன் தொடர்பு.. சுட்டுக் கொன்ற கணவர்.. தற்கொலை செய்து கொண்ட சோகம்
புதுச்சேரி: திருமணத்துக்குப் பின்னரும் தனது காதலருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அமெரிக்கா ஓஹியோ மாநில சிறையில் காவலராகப் பணியாற்றி வந்தார். பாகூர் குடியிருப்புப் பாளையத்தைச் சேர்ந்தவர் சௌமியா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு சௌமியாவை அமெரிக்காவுக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

சௌமியா அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த தம்பதிக்கு 8, 7 வயதில் இரண்டு மகன்களும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் செளமியாவுக்கும், பாலசுப்பிரமணியத்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சௌமியாவை சுட்டதில் சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அதே துப்பாக்கியால் பாலசுப்பிரமணியன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சப்தம் கேட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஓஹியோ மாநில போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது மூன்று குழந்தைகளும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சேரியில் உள்ள இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இருவரது சடலங்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
செளமியா கடலூரைச் சேர்ந்த தனது உறவினரான இளைஞர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால், பாலசுப்பிரமணியனுக்கும், சௌமியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் இந்தியாவுக்கு வந்தபோது அந்த இளைஞர் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் அந்த கடலூர் இளைஞரை அழைத்து விசாரித்துள்ளனர். சௌமியாவுடன் இனி தொடர்புகொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். பின்னர், சௌமியாவை இனி தொடர்புகொள்ள மாட்டேன் என்று அவர் காவல் நிலையத்தில் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதற்குப் பிறகுதான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலைய விசாரணை அதிகாரிகள் கூறுகையில், சௌமியாவும், கடலூரைச் சேர்ந்த இளைஞரும் திருமணத்துக்கு முன்பிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்குமே வேறொருவருடன் திருமணம் ஆகிய நிலையில் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர்.
சௌமியா இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி தனியாக இருந்துள்ளனர். அப்போது, இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பாலசுப்பிரமணியம் பார்த்துள்ளார். அப்போதிருந்துதான் செளமியாவுக்கும், பாலசுப்பிரமணித்துக்கும் தொடர்ந்து அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவியின் பொறுப்பற்ற இந்த செயலால் மூன்று குழந்தைகளும் தற்போது நிற்கதியாக நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications