கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் சிறை கைதிகளுக்கு பரோல் ரத்து.. உறவினர்கள் சந்திக்கவும் தடை!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநில சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுத்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் கைதிகளின் பரோலும் ரத்து செய்து சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலையும், காரைக்கால் மற்றும் மாஹே, ஏணாம் பிராந்தியங்களில் கிளை சிறைச்சாலைகளும் உள்ளன. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 200 விசாரணை கைதிகள் மற்றும் 100 தண்டனை கைதிகள் என 300 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று வருவது உண்டு. தண்டனைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், விசாரணைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், வழக்கறிஞர்கள் அனைத்து நாட்களிலும் விண்ணப்பித்து கைதிகளை சந்திக்கலாம் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

தற்போது புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பரோலும் ரத்தாகியுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications