புதுச்சேரியில் பிரபல ரவுடி மகன் உள்பட 3 பேர் படுகொலை! காலி மனையில் நடந்த கொடூரம்
புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் பிரபல ரவுடி மகன் உட்பட 3 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யாவின் வீடு உள்ளது. கொலை உட்பட பல்வேறு வழக்குகள் சத்யா மீது உள்ள நிலையில் அவர் அங்கு இல்லாததால் தற்போது அந்த வீடு காலி மனையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் 3 இளைஞர்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பெரியகடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக டிஜிபி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முத்தியால்பேட்டை,பெரியக்கடை மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரிஷி, திடீர் நகரை சேர்ந்த தேவா,ஜெ.ஜெ நகரை சேர்ந்த ஆதி என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் டிவி நகரை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா, அந்த மூவரையும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலைகளை அவர் மட்டும் செய்தாரா? கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications