எச்சில் துப்பினால் ரூபாய் 100 அபராதம்.. புதுவையில் அதிரடி.. 1,200 பேரிடம் 1,20,000 வசூல்..!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடமும், முக கவசம் அணியாமல் வந்தவர்களிடமும் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,200 பேரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், எச்சில் துப்புதல், முககவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் உள்ளனர்.

இதனிடையே மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. இந்த உத்தரவுகளை மீறுபவர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியின் முக்கிய சாலைகள், சிக்னல்கள் மற்றும் சந்திப்புகள் வழியாக முக கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி 100 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேலும் காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடமும் 100 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர். அபராதம் செலுத்த தவறியவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 52 கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் முக கவசம் அணியாமலும், பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காகவும் இதுவரை சுமார் 1,200 பேரிடம் 1,20,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுமக்களிடம் அபாரதமாக வசூலிக்கும் 100 ரூபாய்க்கு N95 முக கவசம் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications