சம்பளம் தராமல் கண்ணீர் விடவைத்த புதுவை அரசு.. வாக்கை ஆயுதமாக்கி அரசு ஊழியர்கள் அதிரடி முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்

இந்த நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு 9 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம், ஓய்வூதிய சலுகைகளும் கிடைக்கவில்லையாம். இதனால் கடும் வேதனையில் இருக்கும் ஊழியர்கள் எப்படியாவது நிலுவையில் உள்ள ஊதியத்தை பெற்றிட வேண்டும் என்ற முனைப்பில் பல மாதங்களாக பல கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் புதுச்சேரி அரசு மனம் இறங்கி இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லையாம். இதனால் ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் குடும்பத்தினரில் ஒரு பிரிவினர் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிப்பது என்றும், மற்றொரு பிரிவினர், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.
பேசிபார்த்து பலனில்லை, கெஞ்சி பார்த்தும் பலனில்லை, இதனால் கடைசியில் ஓட்டை ஆயுதமாக பயன்படுத்தியுள்ள. அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் செயலால் ஆளுங்கட்சியான காங்கிரஸும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸும் அதிர்ச்சி அடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications