‘செங்கோட்டையன் நகர்வு தவெகவுக்கு பலம்.. ஆனால்..’ - தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அவரின் வருகை தவெகவுக்கு பலம் என்றும், கொங்கு மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கை இது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், செங்கோட்டையன் வருகை தவெகவுக்கு பலம். என்று கூறியுள்ளார். மேலும் அது அதிமுக - பாஜக கூட்டணியில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தங்கள் தலைமையில் கூட்டணி என்று அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வியூகம் அமைத்து களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.

செங்கோட்டையன் தவெக இணைப்பு
அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பு. ஏற்கனவே அதிமுக வில் இருந்து விலகி பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை. எல்லா மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அதிக நிதி (சுமார் ரூ.63,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுக்கான ரயில் பெட்டி, நம் பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி
அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு முதலீட்டில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சொதப்பிக் கொண்டிருக்கிறது. ஃபாக்ஸ்கான், தென்கொரியா உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வரமுடியவில்லை. செங்கோட்டையன் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் எந்த கட்சியில் சேர்வதற்கும் அவருக்கு உரிமை உள்ளது. அவர் ஒரு அரசியல் நகர்வை செய்துள்ளார். அவருக்கான பாதையை அவர் தேர்வு செய்துள்ளார்.
செங்கோட்டையன் வருகை நிச்சயமாக தவெகவுக்கு பலம் சேர்க்கும். செங்கோட்டையன் ஒரு கட்சியில் சேர்ந்து அதன் தலைவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அவர் இணைந்த கட்சியின் தலைவரை பாராட்டுவது செங்கோட்டையனின் விருப்பம். அதில் நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. எவ்வளவு உள்கட்சி பிரச்சனைகள் இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக தான் உள்ளது.
மாற்றம் இல்லை
மத்தியில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் கட்சி, மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி என்ற அடிப்படையில் அதிமுக பாஜகவுக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும். கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் வலுவாக தான் இருக்கிறோம். செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவு என்று நான் சொல்ல முடியாது. நாங்கள் வெற்றி பெறுவதில் எந்த மாற்றமும் இருக்காது." என்றார்.












Click it and Unblock the Notifications