பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே மர்ம நபர்கள் சிலர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை மேற்கொண்டதில், அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து பிடிபட்ட ஆகாஷ், மணிகண்டன், ஜோயல் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த வினோத் மற்றும் லூர்துராஜை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அருண்பாண்டியன், விஜய் இருவரையும் தனிப்படை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரிடமிருந்து ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 7 பேரில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு தமிழக பகுதிகளில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருவண்ணாமலையை சேர்ந்த பெண் தாதா அதிகளவில் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாக பகிரங்கமாக பேசியிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் புதுச்சேரி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications