குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்.. ஒரே ஆண்டில் முடிப்போம்.. இஸ்ரோ மைய இயக்குநர்
புதுச்சேரி: குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் திட்டம் ஒரு வருடத்தில் முடிக்கபடும் என்று ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் பேசிய சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், மாணவர்கள் ஆசிரியர்கள் கொடுக்கும் பிராஜெட்டுகளை விலை கொடுத்து வாங்காமால், அவற்றை தாங்களே உருவாக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு படிப்பு மட்டும் இல்லாமல் தனிமனித சுய ஒழுக்கம் மிக முக்கியம். இதுவே உங்களை மேலான இடத்திற்கு கொண்டு செல்லும். படிப்பை தவிர்த்து வேறு எதையும் கவனத்தில் கொள்ளாதீர்கள். மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களை மட்டும் கொள்ளுங்கள் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜராஜன், குலசேகரபட்டிணம் ஏவு தளத்திற்கு இடம் முடிவாகி விட்டது. இடம் கையகப்படுத்திய பணி முடிந்த பிறகு எங்களது வேலை நடக்கும். குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்தை ஒரு வருடத்தில் முடிக்க உள்ளோம். இங்கு குறைந்த செலவில் ராக்கெட் ஏவப்படும். கடல்பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற பெயரில் இந்த ஆண்டுக்குள் செயற்கைகோள் அனுப்பப்படும். இந்த செயற்கைகோள் சூரியனின் தன்மை மற்றும் சூரியனின் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications