"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதுச்சேரி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். "வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார் விஜய்.
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். புதுச்சேரியில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் விஜய்.
விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் இத்தேர்தலில் சில மணி நேரங்களே உள்ளன. எனவே வாக்குப்பதிவு நிறைவு பெரும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த முறையை விட இம்முறை அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாம். இதற்கு இந்த முறை புதிதாக வாக்கு செலுத்தும் இளைஞர்கள் முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது. புதிதாக வாக்களிக்கும் இளைஞர்கள் பலர் ஆர்வமாக தங்களின் வாக்குகளை காலையிலேயே செலுத்திவிட்டதாகவும் தகவல் வருகின்றன. எனவே, கடந்த முறையை விட புதுச்சேரியில் அதிக வாக்குகள் பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications