நீங்க டாக்டர் தான்.. ஆனா ஏதோ பிரச்சனை.. மனநல மருத்துவரை பாருங்க.. தமிழிசைக்கு நாராயணசாமி பதிலடி!
புதுச்சேரி : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மன நிலையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது போல இருக்கிறது. அவர் டாக்டராக இருந்தாலும் ஒரு சிறந்த மனநல மருத்துவரைப் பார்த்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் நடைபயணத்தை விமர்சித்துப் பேசிய தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம் என காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

ராகுல் டீ-சர்ட்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ராகுல் காந்தியின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ சர்ட் பற்றி பாஜகவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீசர்ட். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார். அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகின்றன.

பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை
உள்துறை அமைச்சர் அமித்ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர். காங்கிரஸ் கட்சியை குறைகூற பாஜகவுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

தமிழிசை அரசியல்
பாதயாத்திரை பற்றி ஆளுநர் தமிழிசை ஏளனமாகப் பேசியுள்ளார். நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக கூறியுள்ளார். தெலுங்கானாவுக்குத்தான் அவர் ஆளுநர். அந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அனைவரும் தமிழிசையை உதாசீனப்படுத்துகின்றனர். எனவேதான் புதுச்சேரியில் அதிக நாட்கள் தங்கியுள்ளார்.

மனநல மருத்துவரைப் பாருங்கள்
ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் செய்யக்கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. ஏதோ அவர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல இருக்கிறது. அவர் டாக்டராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிறந்த மனநல மருத்துவரைப் பார்த்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது.

பாஜகவின் பதில் என்ன?
பிரதமர் மோடி பிறந்தநாளை மழைநீர் சேகரிப்பு வாரமாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி முதல்வர் ரங்கசாமி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இது பிரதமரின் பிறந்தநாளை கொச்சைப்படுத்துவது. இதில் ரூ.90 கோடி பணம் கைமாறியுள்ளது. இதை பாஜக எம்.எல்.ஏ. சட்டசபையில் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் பாஜக தலைவர்களின் பதில் என்ன?

ரவுடிகளின் கூடாரம்
பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்து. புதுச்சேரியில் ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முதல்வர் ரங்கசாமி அலுவலகம் ரவுடிகள் கூடாரமாக மாறியதுதான் காரணம். முதல்வர் அலுவலகத்திலேயே ரவுடிகள் இருந்தால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?" என நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications