ஏடிஎம் இயந்திரத்தை பூட்ட மறந்த ஊழியர்கள்.. கேட்பாரற்று கிடந்த 12 லட்சம்.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் ரூபாய் 12 லட்சம் பணத்துடன் பிரபல வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் திறந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்திரப்பாளையம் பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இங்கு இன்று பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரம் திறந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கும் விரைந்து வந்த போலீசார் கனரா வங்கியின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவதால், அந்த அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
விசாரணையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள் முஸ்தபா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ரூபாய் 12 லட்சம் பணத்தை ஏ.எடி.எம் இயந்திரத்தில் நிரப்பிய பின்னர், மெக்னேட் கருவியின் பூட்டை சரியாக மூடாததால் கதவு தானாக திறந்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த பணத்தை ஆய்வு செய்தபோது, பணம் சரியாக இருந்ததால் பூட்டை பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.
இருப்பினும் ஏ.டி.எம் இயந்திரத்தின் பூட்டை பூட்டாமல் விட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்தில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.