மத்திய அரசுக்கு எதிர்ப்பு.. வீடுகளில் கருப்பு கொடி கட்டிய புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு கொரோனா நிவாரண நிதி அளிக்காததைக் கண்டித்து, கொரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 6 பேருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதால், அவர்கள் வசித்து வந்த சொர்ணா நகர் பகுதி மற்றவர்கள் நுழைய முடியாதபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது.
அதேபோல் அரியாங்குப்பம் கொம்யூன் மேற்கு பஞ்சாயத்து முழுவதும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் யாரும் வெளியே வர முடியாதபடி அனைத்து இணைப்பு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி அந்த பகுதியில் மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் கொம்யூன் மேற்கு பஞ்சாயத்துக்குட்பட்ட கோட்டைமேடு, சிவகாமி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதி அளிக்காததைக் கண்டித்து தங்களது வீடுகள், தெருக்களில் உள்ள மரங்கள், மின்கம்பங்களில் கருப்பு கொடி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார், சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று, அங்குள்ள வீடுகள், மரங்கள், மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடியை அவிழ்த்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் அங்கு மக்கள் கூட்டமாக கூடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும் நிதி வழங்கவில்லை. எனவே கொரோனாவுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், நிவாரணமாகவும் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு ரூபாய் 995 கோடி நிதி வழங்க வேண்டும். அனைத்து மாநிலத்தையும் போல புதுச்சேரிக்கு நிதி கொடுக்க வேண்டுமென எனக்கோரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசிடமிருந்து நிதி தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications