புதுவையில் 2 முக்கிய பதவிகளை குறிவைத்துள்ள பாஜக.. எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா தாமதமாக காரணம் என்ன
புதுச்சேரி: சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் ஆன பிறகும், புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்காதது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியானது. என் ஆர் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியது. என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. பாஜக 6 இடங்களைக் கைப்பற்றியது.
அதேபோல திமுக ஆறு இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சை வேட்பாள்கள் ஆறு இடங்களில் வென்றனர். புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

சபாநாயகர் பதவி
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 7ஆம் தேதி என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, அவர் கடந்த மே 9ஆம் தேதி மூத்த அரசியல்வாதி கே.லட்சுமிநாராயணனை சபாநாயகராக நியமிக்கும் கோப்புகளைத் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தார். பல ஆண்டுகள் காங்கிரஸ் இருந்து லட்சுமிநாராயணன் தேர்தலுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தான் என் ஆர் காங்கிரசில் இணைந்தவர்.

துணைநிலை ஆளுநர்
இருந்தாலும், 10 நாட்கள் ஆன பிறகும்கூட துணை நிலை ஆளுநர் இந்த கோப்பில் கையெழுத்திடவில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான், எம்எல்ஏக்கள் பதவியேற்க முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அப்போது, எம்எல்ஏக்கள் பதவியேற்பு குறித்து பெரிய விவாதம் எழவில்லை.

புதுவை திரும்பிய ரங்கசாமி
ஆனால், ரங்கசாமி கடந்த மே 17ஆம் தேதி புதுவை திரும்பினார். அப்போது முதலே எம்எல்ஏக்கள் பதவியேற்பு குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளன. தற்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் கட்சியினர் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நியமன எம்எல்ஏக்கள்
முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையிலிருந்த போது, நியமன எம்எல்ஏக்களை மத்திய பாஜக அரசு அறிவித்ததும் என் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கே.வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம் மற்றும் ஆர்.பி. அசோக் பாபு ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெங்கடேசன் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவர், இந்தாண்டு பிப்ரவரி மாதம், காங்கிரஸ் அரசு கவிழ இவரது ராஜினாமா முக்கிய காரணமாகும்.

துணை முதல்வர்
நியமன எம்எல்ஏக்களை தவிர சுயேச்சை எம்எல்ஏக்களையும் பாஜக தொடர்பு கொண்டுள்ளது. 6 சுயேச்சை எம்எல்ஏக்களில் மூன்று பேர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, புதுவையில் பாஜகவின் மொத்த பலம் 12ஆக உள்ளது. இது என் ஆர் காங்கிரஸை விட 2 இடங்கள் அதிகமாகும். இதன் காரணமாகவே பாஜக துணை முதல்வர் பதவிக்குக் குறை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இருப்பினும், கடந்த காலங்களில் புதுவையில் துணை முதல்வர் பதவி இருந்ததில்லை என்றும் மத்திய அரசு விரும்பினால் அப்படியொரு பதவியை உருவாக்கலாம் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் பதவி
அதேபோல பாஜக புதுவை சபாநாயகர் பதவியையும் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு எப்படி கவிழ்த்தப்பட்டது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ள ரங்கசாமி சபாநாயகர் பதவியை பாஜகவுக்குக் கொடுக்க தயாராக இல்லை. மேலும் 33 எம்எல்ஏக்களை கொண்ட புதுச்சேரியில் அதிகபட்சமாக ஏழு அமைச்சர்களைக் கொண்டிருக்க முடியும். அதிலும் பாஜக சில முக்கிய துறைகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கால தாமதத்தால் பெரும் ஆபத்து
இவை எல்லாம் தீர்ந்த பிறகு எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெற வேண்டும் என்பது பாஜகவின் விருப்பமாக உள்ளது. இதன் காரணமாகவே சபாநாயகர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கும் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், புதுவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைந்து அமைச்சர்கள் பதவியேற்று தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து புதுச்சேரியை காக்க முடியும் என்பதே புதுவை மக்களின் எண்ணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications