புதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு
புதுவை: புதுச்சேரியில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி தளர்வுகள் 5.0-ன் படி அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஆனால் திரையரங்குகள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 50 சதவீத மக்கள் உடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவித்து வருகிறது. அதன்படி மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த நிலையில் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் தற்போது ஊரடங்கு தளர்வு களத்தில் பல்வேறு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமுடக்கம்
இதில் புதுச்சேரியில் பொது முடக்கத்துடன் கூடிய தளர்வு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு 5-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வரலாம்.

அக்டோபர் 15
அதே போன்று 9 மற்றும் 11-ஆம் தேதி மாணவர்களுக்கு 12-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திறக்கலாம், சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திறக்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்
மேலும் பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி, அனைத்து கடைகளும் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி உணவகங்கள் மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் 10 மணிவரை பார்சல் வினியோகம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

மதுபான கூடங்கள்
மதுபானக் கடைகள், மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபானக் கூடங்களுக்கு கலால் விதிமுறைகள்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடற்கரைச் சாலைகளில் இரவு 9 மணிவரை நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications