Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரியில் திமுக, பாஜகவை விமர்சித்த விஜய்.. 73 நாட்களுக்கு பிறகு மக்கள் மத்தியில் பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து 73 நாட்களுக்கு பிறகு இன்று புதுச்சேரியில் தனது பரப்புரை வாகனம் மீது நின்று பிரச்சாரம் மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். இதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், பிரச்சார வேனில் நின்றபடி சுமார் 11 நிமிடங்கள் பேசினார்.

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. QR குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியது.

Vijay tvk puducherry

விஜய் மக்கள் சந்திப்பு

விஜய் அதி நவீன சொகுசுப் பேருந்தில், மக்கள் சந்திப்பு பயணம் சென்றார். அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கடும் கூட்டம் கூடியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, தொண்டர்களுக்கு பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 27-இல் கரூரில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வுக்குப்பிறகு, விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தவில்லை. அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க ரோடு ஷோக்கள் நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் தவெக கூட்டம்

இந்த நிலையில் புதுச்சேரியில் தவெக கடும் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக அக்கட்சி சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு கியூஆர் குறியீடுடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலத்தினர் இந்தக் கூட்டத்துக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனுமதி அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மூன்று இடங்களில் வாகன நிறுத்துமிடம் (பார்க்கிங்) வசதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில எல்லையில் 17 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடும் கட்டுப்பாடுகள்

தவெக பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. விஜய் இன்று காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டிலிருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசுவார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கைகள் வசதி கிடையாது. நின்றபடியே விஜய்யின் பேச்சைக் கேட்க உள்ளனர்.

தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மழை காரணமாக சேறும், சகதியுமாக இருந்தது. தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண்ணை கொட்டி சமப் படுத்தப்பட்டுள்ளது. உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

அனுமதி

கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைப் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களைச் சாலையோரம் நிறுத்தக் கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரையின் பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உப்பளம் சாலையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல பொதுக்கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் வாகனங்களைக் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்துக்கு நடந்தே வர வேண்டும் என காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் விஜய்

புதுச்சேரி உப்பளம் பகுதியில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புதுச்சேரி புறப்பட்டு, புதுச்சேரி வந்தடைந்தார். பின்னர், கூட்டத்தை கட்டுப்படுத்த நேரம் ஆனதால் பிரச்சார வேனுக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.

அதன்பிறகு பேசிய விஜய், "1977இல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியமைத்தார். ஆனால் அதற்கும் முன்பு 1974லேயே புதுச்சேரியில் அவருடைய ஆட்சி அமைந்தது. தமிழ்நாட்டை போலவே புதுச்சேரி மக்களும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக என்னை தாங்கி பிடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். எனவே புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை.

புதுச்சேரி அரசு பற்றி சொல்லியே ஆகவேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிற திமுக அரசு போன்று கிடையாது. ஏனென்றால் வேறு ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாகவே இருந்தாலும், பாரபட்சமே காட்டாமல் அங்கு வருகிற அனைவருக்கும் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+