"நச்"சுன்னு நங்கூரத்தை பாய்ச்சுவாரா "சாமி".. நமச்சிவாயத்தை பழி தீர்ப்பாரா.. பயங்கர எதிர்பார்ப்பு
புதுச்சேரியில் நாராயணசாமி என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலை வைத்து பலரும் பலவிதமாக விளையாட காத்துள்ளனர். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் ஏதாவது பாலிட்டிக்ஸ் பண்ண வாய்ப்பிருக்கா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி விவகாரத்தில் திமுக வேகமாக முன்வந்து குரல் கொடுக்க நாராயணசாமியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், புதுச்சேரியில் இப்போது நடக்கும் எல்லாவற்றுக்கும் மூல காரணம் பாஜக என்றாலும் கூட அதன் முக்கியமான புள்ளியான நமச்சிவாயம்தான் அதில் முதன்மையாக இருக்கிறார் என்பதால்.
நமச்சிவாயத்தை நாராயணசாமி மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார். காரணம், அவரால் இவருக்கு மறக்க முடியாத சம்பவங்கள் கடைசி நேரத்தில் நிகழ்ந்தது என்பதால்தான்.

நாராயணசாமி
நாராயணசாமிக்காக முதல்வர் பதவியை நமச்சிவாயம்தான் விட்டுக் கொடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதேசமயம் கூட இருந்தே குடைச்சல் கொடுக்கத் தவறவில்லை நமச்சிவாயம். இதன் காரணமாகத்தான் நாராயணசாமியால் சுயமாக செயல்படவே முடியவில்லை. போதாக்குறைக்கு கடைசி நேரத்தில் கட்சியை விட்டு பாஜகவில் சேர்ந்து நாராயணசாமியின் சரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார் நமச்சிவாயம்.

ஆபத்து
இந்த நிலையில் தற்போது என். ரங்கசாமி அரசுக்கு ஆபத்து வந்துள்ளது. வாசல் வரைக்கும் வந்து விட்ட அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் இருக்கிறார் ரங்கசாமி. மருத்துவமனையிலும் போய்ச் சேர்ந்து விட்டார். இந்த நிலையில் திடீரென இந்த விவகாரத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் என திமுக கூட்டணி களத்தில் குதித்துள்ளது. இதை பாஜக தரப்பு எதிர்பார்க்கவில்லை.

குடைச்சல்
இதன் பின்னணியில் நாராயணசாமி இருக்கலாம் என்று சொல்கிறார்கள். காரணம், நமச்சிவாயம் முதல்வராகி விடக் கூடாது என்று பரபரப்பாக இருக்கிறாராம் நாராயணசாமி. அவர் வந்தால் தனக்கு மேலும் குடைச்சல் கொடுப்பார் என்று அஞ்சுகிறார் நாராயணசாமி. மேலும் ரங்கசாமி முதல்வராக இருந்தால் நீக்குப் போக்காக நடந்து கொள்வார், கண்ணியமாக இருப்பார் என்றும் நாராயணசாமி நம்புகிறார். பாஜக ஆட்சிக்கு வந்து விட்டால் மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் அவர் கணிக்கிறார்.

காங்கிரஸ்
எனவே அவரது கோரிக்கையின் பேரில்தான் திமுக இதில் தலையிட்டிருக்கலாம் என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. திமுகவுக்கு புதுச்சேரி சட்டசபையில் தற்போது 6 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 2 பேர் உள்ளனர். மொத்தமாக 8 பேர் உள்ளனர். ரங்கசாமிக்கு 10 பேர் உள்ளனர். கூட்டினால் 18 ஆகும். இவர்கள் இணைந்தால் தாராளமாக ஆட்சியமைக்கலாம்.

பாஜக
சுயேச்சைகள் 6 பேர் இருந்தாலும் அத்தனை பேரும் பாஜக பக்கம் போவார்கள் என்று கூற முடியாது. சிலர் ரங்கசாமி பக்கமும் வரக் கூடும். எனவே பாஜகவுக்கு அதிகபட்சம் 12 பேர் வரை கிடைக்கக் கூடும். மற்றவர்கள் ரங்கசாமி பக்கமே வரக் கூடும் என்று தெரிகிறது. எனவே காற்று மாறி வீசினால் ரங்கசாமி அரசு பிழைக்கும் என்பது நாராயணசாமியின் கணக்கு என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications