புதுச்சேரியில் தாவணி கட்டி நின்ற "நிலா".. தமிழில் பேசி, ரோஜா தந்து பேசிய அதிசயம்! அசந்த வாக்காளர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடந்தது.. அரசியல் களம் 4 முனைப் போட்டிகளால் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய தொழில்நுட்ப விந்தை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் தேர்தல் ஆணையம் செய்த வினோத ஏற்பாடு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்ன தெரியுமா?
புதுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில் தான் இந்த சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அங்கு வாக்காளர்களை வரவேற்பதற்காக மனிதர்களுக்குப் பதிலாக "நிலா" என்ற அதிநவீன ரோபோ நிறுத்தப்பட்டிருந்தது. பொதுவாக ரோபோக்கள் என்றாலே இயந்திரத்தனமாக இருக்கும் என்ற பிம்பத்தை இந்த 'நிலா' ரோபோ உடைத்தெறிந்துள்ளது..
தாவணியில் ஜொலித்த நிலா ரோபோ
தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக அழகிய தாவணி அணிவிக்கப்பட்டு, பெண் சிலையை போல நிலா காட்சியளித்தது. அதன் கைகளில் ரோஜா பூக்கள் நிரம்பிய தட்டு இருந்தது, அங்கு வந்த வாக்காளர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வாக்குச்சாவடிக்கு வந்த ஒவ்வொரு வாக்காளரையும் இன்முகத்துடன் வரவேற்ற நிலா ரோபோ, அவர்களுக்கு ரோஜா பூக்களை வழங்கி கௌரவித்தது. இந்த வரவேற்பு முறையானது வாக்களிக்க வந்த முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, குழந்தைகளுடன் வந்த பெற்றோர் மற்றும் முதல்முறை வாக்களிக்க வந்த இளைய தலைமுறையினர் இந்த ரோபோவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது.
டபுள் மொழிகளில் பேசி அசத்திய நிலா
இந்த ரோபோ வெறும் பொம்மை போல நிற்காமல், வாக்காளர்களுடன் உரையாடி அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கியது. "வணக்கம், வாக்குச்சாவடிக்கு வரவேற்கிறோம். தயவு செய்து அமைதியாக வரிசையில் செல்லுங்கள். உங்களது வாக்காளர் அடையாள அட்டையைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்" என்று மிகத் தெளிவான மற்றும் இனிமையான குரலில் அது பேசியது அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மிக முக்கியமாக, இந்தத் தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அந்த ரோபோ மாற்றி மாற்றிப் பேசியது அதன் தொழில்நுட்ப சிறப்பைக் காட்டியது. "தயவு செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டையை தயாராக வைத்து இருங்கள்" என அது நினைவூட்டியது தேர்தல் பணியாளர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்தது.
சோஷியல் மீடியாவில் வைரல்
இந்த அதிநவீன ரோபோவின் உருவாக்கம் குறித்து அதன் ரோபோடிக் வடிவமைப்பாளர் கவுசிக் விரிவான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் சொல்லும்போது, "எங்கள் 'நிலா' ரோபோவை முழுக்க முழுக்க வாக்காளர்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வடிவமைத்துள்ளோம். இங்கு வரும் வாக்காளர்களுக்குத் தேவையான உதவிகளை இது வழங்கும்.
இந்த ரோபோவை எங்களது சொந்த மென்பொருள் (Software) மூலமாக முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசும் திறன் இதற்கு உண்டு. அதனால் எந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இது எளிதாகப் புரியும் வகையில் தகவல்களைத் தரும்," என்றார்.
பரபரக்கும் தேர்தல் களம்
இன்றைய தினம் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், வ.உ.சி பள்ளி வாக்குச்சாவடியில் இந்த ரோபோ செய்த மென்மையான வரவேற்பு இறுக்கமான தேர்தல் சூழலை இனிமையாக்கிக் கொடுத்தது.
வாக்குச்சாவடிகளில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி, வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேர்தல் நடைமுறைகளை எளிதாக்கவும் ஒரு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது. நிலா ரோபோவின் இந்தச் செயல்பாடுகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications