செல்போன் நம்பர்.. சிக்கலில் பாஜக.. புதுச்சேரி தேர்தலை தள்ளி வைக்கலாமா? ஹைகோர்ட் அதிரடி கேள்வி
புதுச்சேரி: வாக்காளர்களின் தொலைபேசி எண்களை முறைகேடாக பாஜக "எடுத்துக்கொண்டதாக" வந்துள்ள புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுக்க தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் அம்சம் தொலைபேசி எண் "திருட்டு" என்பது பற்றி தான்.
இந்த விவகாரத்தில் தான் சாட்டையை எடுத்து சுற்றியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தை போலவே ஒரே கட்டமாக புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஹைகோர்ட்டில் வழக்கு
இந்தநிலையில் புதுச்சேரி வாக்காளர்கள் செல்போன்களுக்கு பாஜக தரப்பில் இருந்து சமீபகாலமாக தங்களுக்கு ஓட்டு போடுமாறு கோரிக்கை விடுத்து மெசேஜ்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதை கவனித்த, புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . அதில், வாக்காளர்கள், செல்போன் எண்களை, ஆதார் மூலமாக சட்டவிரோதமாக பாஜகவினர் பெற்று தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையம் பதில்
இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் கோரியிருந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தரப்பு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது . எஸ்எம்எஸ் மூலமாக பிரச்சாரம் செய்வதற்கு பாஜக தரப்பு தங்களிடம் அனுமதி பெறவில்லை, அவர்கள் எப்படி தொலைபேசி எண்களை பெற்றார்கள் என்பது பற்றி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து அவர்கள் அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை விசாரணை முடிவடையாததால் இந்த தேர்தலில் இருந்து பாஜகவை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இந்த விசாரணையை நீதிமன்றம் வேண்டுமானால் கண்காணித்து கொள்ளட்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது
இதையடுத்து பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரச்சார குற்றச்சாட்டு விசாரணை முடிவடையும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செல்போன் எண்கள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி ஆதார ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீண்டும் இந்த வழக்கு விசாரணை மார்ச் மாதம் 31 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
தனி நபர் பாதுகாப்பு
தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று ஆதார் உட்பட, பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் தனி நபர் ரகசியங்கள் எப்படி பாஜகவுக்கு சென்றது என்ற கேள்வி இப்போது புதுச்சேரியில் வெடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.