இது லிஸ்ட்லயே இல்லையே.. புதுச்சேரியில் பாஜகவின் ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் அபாயத்தில் முதல்வர் நாராயணசாமி இருக்கிறார். வாழ்வா சாவா என்ற நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நாளை மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் புதுசேரியில் பாஜக ஆட்சியை கைப்பற்ற பல அதிரடி வீயூகங்கள் வகுத்து வருவதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் உள்ளது.
பாஜகவின் அரசியல் ஸ்டைல் என்பது ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உள்ள வலுவான கட்சியுடன் கூட்டணி அமைத்து ஓரளவு சீட் வாங்கி கட்சியை பலப்படுத்தும்.
அதன் பின் எதிர்தரப்பில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் வசப்படுத்தி ஒருகட்டத்தில் கட்சியை பெரிய அளவில் பலப்படுத்தும், அதன் பின்னர் தேர்தல்களில் அதிக இடங்களில் கூட்டணி ஆட்சியில் இடம் பெறும். இறுதியாக கூட்டணி கட்சியை விட பலமாகி அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

பாஜக பலம்
மேலே சொன்ன தகவல்கள் பொய் இல்லை. ஏனெனில் கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், கோவா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்கள் என பல மாநிலங்களை உதாரணமாக சொல்ல முடியும். ஒன்று தங்கள் ஆட்சி, அல்லது தங்களின் கூட்டணி ஆட்சி இதுதான் பாஜகவின் வியூகம். தற்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு இனி பாஜக ஆட்சியை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பாதி இந்தியா
இதனிடையே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காவி கொடி பறக்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது. மோடி மற்றும் அமித்ஷாவின் கனவும் இதுதான். அதற்கான வேட்கையில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவை வென்றுவிட்டது பாஜக. ஆனால் தென்னிந்தியாவில் கர்நாடகாவை தாண்டி பாஜகவால் வெல்ல முடியவில்லை. ஆனால் தெலுங்கானாவில் பலமாகி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியிலும் பலமாகி வருகிறது.

4 பேர் ராஜினாமா
புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கியதலைவரான நமச்சிவாயத்தை தன் பக்கம் இழுத்தது. அவருடன் சேர்த்து இதுவரை 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவிற்கு ஏற்கனவே அங்கு 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்று சொல்லப்படுகிறது.

பலம் என்ன
தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணி 14, ரங்கசாமியின் கட்சிக்கு 14 இடங்கள் என சமபலம் உள்ளது. நியமன எம்எல்ஏக்கள் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை ரங்கசாமியால் காலி செய்துவிட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் எப்படி பாஜகவிற்கு முடிவுகள் இருக்கும் என்பது தெரியாது.

பாஜக பிளான்
ஆனால் புதுச்சேரியில் ரங்கசாமியுடன் இணைந்து அசுர பலத்துடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் ரங்கசாமியின் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து வென்றால் அங்கு பாஜக துணை முதல்வர் பதவி கேட்டாலும் ஆச்சயர்படுவதற்கு இல்லை. அதற்கான திட்டங்கள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் காவி கொடி பறக்குமா என்பது இன்னும் 3 மாதத்தில் தெரிந்துவிடும். பாஜகவின் திட்டத்தால் காங்கிரஸ் ஆடிப்போய் உள்ளது.












Click it and Unblock the Notifications