புதுச்சேரியில் களைகட்டிய சர்வதேச வேட்டி தினம்.. நெசவாளர்களை போற்றி உறுதிமொழி ஏற்பு!
புதுச்சேரியில் சர்வதேச வேட்டி தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை முதல் அனைத்து அரசு அலுவலக ஊழியர்கள் வரை அனைவரும் வேட்டி கட்டிகொண்டு பணிக்கு வந்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் சர்வதேச வேட்டி தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை முதல் அனைத்து அரசு அலுவலக ஊழியர்கள் வரை அனைவரும் வேட்டி கட்டிகொண்டு பணிக்கு வந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது. உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஜனவரி 6 ஆம் தேதி சர்வதேச வேட்டி தினம் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் வேட்டி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச வேட்டி தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி தலைமை செயலகத்தில் தலைமை செயலர் அஸ்வின் குமார் மற்றும் தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர். தொடர்ந்து அனைவரும் தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும், நெசவாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் அஸ்வின் குமார், தமிழரின் கலாச்சாரமான வேட்டி, சட்டை அணிவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகும். தமிழகத்திற்கு ஏற்ற ஆடையான வேட்டி, சட்டை அணிவது எளிதாக உள்ளது. வருடந்தோறும் புதுச்சேரியில் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். வேட்டி தினத்தில் மட்டும் வேட்டி அணிவதை விட, தினந்தோறும் அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேபோல் ராஜ்நிவாசிலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து இன்று பணிக்கு வந்தனர்.