குடிப்பதற்கு பணம் தராததால் ஏடிஎம்மை உடைத்த இளைஞர்.. தேடி வந்த போலீஸ்.. பரபர சம்பவம்
புதுச்சேரி : குடிப்பதற்கு தாய் பணம் தராததால் ஏடிஎம் இயந்திரங்களை சுத்தியலால் சேதப்படுத்திய பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் 2 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்து எடுத்து வந்த சுத்தியலை கொண்டு அங்கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களின் மானிட்டர்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இயந்திரம் உடைக்கும் போது எஸ்பிஐ வங்கிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர்.

பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வங்கியின் மேலாளர் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இளைஞரை, ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் தான் மாட்டிக் கொள்வோம் என்று உணர்ந்த கார்த்திக் நீதிமன்றத்தில் சரணடைய சென்றபோது. உருளையன்பேட்டை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார்.
குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்று உடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் பணம் எடுக்க முடியாது என்று தெரிந்ததை அடுத்து உடனே அங்கிருந்து திரும்பி சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு தராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியால் உடைத்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications