என்னா ஒரு புத்திசாலித்தனம்.. திமுக எம்எல்ஏ பாரில் நூதன முறையில் மதுபானம் திருட்டு!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏவின் மதுபானக்கடையின் எக்ஸாஸ்ட் பேன் அருகேயுள்ள துளை வழியாக நுழைந்து அங்கிருந்து மதுபாட்டில்களை இளைஞர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 469 மதுபானக் கடைகள் மற்றும் 98 சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, அனைத்து மதுபானக் கடைகள், குடோன்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் கள்ளச்சந்தையில் தொடர்ந்து மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, மதுபானக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து மதுவிற்பனை நடந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஊரங்கின்போது மதுக்கடைகளில் இருந்த மதுபானங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. கணக்கு சரியில்லாத 89 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுபானம் இருப்பு குறித்து மதுக்கடைக்கு ஆய்வுக்கு சென்ற தாசில்தார் கார்த்திகேயன் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதாகக் கைதானார். அவருடன் அரசு அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 8 பேர் கைதானார்கள். பல போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டிருந்த மதுபானக்கடையின், காற்று வெளியேற்றும் எக்சாஸ்ட் பேன் துளை வழியாக சென்று இளைஞர்கள் மதுபானம் திருடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகடை காவல்நிலைய போலீசார், ரெங்கபிள்ளை வீதியில் ரோந்து சென்றபோது சந்தேகபடும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தது. உடனே அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், குடிக்க மது இல்லாத காரணத்தால், ரெங்கபிள்ளை வீதியில் உள்ள திமுக எம்எல்ஏ சிவாவுக்கு சொந்தமான மதுபானகடையின், காற்று வெளியேற்றும் எக்சாஸ்ட் பேன் துளை மூலம் உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடியாதாக ஒப்பு கொண்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட விஜய்(21), தினேஷ்(28) ஆகியோரை போலீசார் கைது செய்து திருடிய மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications