EMI கட்டியே ஆகனும்.. நிதி நிறுவனம் நெருக்கடி.. போலீசில் புகார் செய்த வாலிபர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி, மாத தாவணை கட்டச்சொல்லி நெருக்கடி தந்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையில், தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்தது.
அதன்படி வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணையை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மேலும் 3 மாத தவணையை கட்டச்சொல்லி வாடிக்கையாளர்களை நிர்பந்திக்ககூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை பல்வேறு வங்கிகள் காற்றில் பறக்க விட்டுள்ளன. நடப்பு மாத தவணையை செலுத்த சொல்லி வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் தருவது, தவணையை குறிப்பிட்ட தேதியில் கட்டாவிட்டால் கணக்குகளை முடக்குவது, கூடுதல் வட்டி போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அப்படி ஒரு சம்பவம்தான் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதனிடையே கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள, ஊரடங்கால் வருமானமின்றி தவித்த வந்த அவர், ரிசர்வ் வங்கி அறிவித்தபடி மூன்று மாத தவணையை நிறுத்தி வைக்குமாறு, குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனத்தை அனுகியுள்ளார். ஆனால், ஜேக்கப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த அந்த நிறுவனம், அவருடைய கணக்கை முடக்கம் செய்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜேக்கப், ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்பட்ட அந்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய நினைத்தாலும், அதன் பலனை வங்கிகள் பாமர மக்களுக்கு அளிக்காதது, வேதனைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications