திடீரென நடு ரோட்டில் தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பைலட் மற்றும் இன்னொரு நபர் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே கீரனூரில் புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியது. அந்தச் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் திடீரென விமானம் இறங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினர். விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த உடனே காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விமானத்தை பாதுகாப்பாக விலக்கி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது விமானம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்த அவசரத் தரையிறக்கம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications